Bungee jumping of their own - என் பார்வையில்..

காதலுக்கு பாலின வேறுபாடு அவசியமில்லை... ஆழ்மனதில் அதை உணர்ந்தாலே போதும் என சொல்ல முயற்சித்திருக்கும் கதை. (கொஞ்சம் மறுஜென்ம சாயலும்).
பயமும் ஆர்வமும் கலந்த பால்ய அழகான காதல், பிரியமான காதலி, அவர்களுக்குள்ளான ரம்மியமான ஊடல், திடீரென விபத்தில் அவள் மரணம்..
ஒரு மெல்லிய இசையை கேட்டுமுடிக்கும் தருவாயில் தோன்றும் பாரத்துடன் ஆரம்பிக்கிறது படத்தின் பிற்பாதி.
நாயகன் ஆசிரியராய் சேரும் பள்ளியில், தன் இறந்துபோன காதலியை நினைவுபடுத்தும் ஒரு மாணவன். காதலியை ஒத்திருக்கும் அவனது பேச்சுக்களும் படம்வரையும் திறனும், பார்க்கும்போதெல்லாம் நாயகனுக்கு அவனைநோக்கியதான ஓர் உந்துதலை ஏற்படச்செய்கிறது.
//
After I'm born again,
I'm going to look for you.

And when I do,
I'll fall in love with you again.

Really?
But how will you know
if it's me in my next life?

I'll recognize you.
I'll know.

How?

I'm going to fall in love
again with someone else.
That person will be you.
//
காதலின் அழுத்தத்தை கவிதையாய் சொல்லிச்செல்லும் காட்சி இது.
ஓரினச் சேர்க்கைக்கு முன்னதான நூலிழையை லாவகமாக தொட்டுச் சென்றிருக்கிறார் இயக்குனர். ஒட்டுமொத்த பள்ளியுமே நாயகனை ‘Gay’ என அழைக்கையில் நமக்கு அந்த கதாப்பாத்திரம் மீது பரிதாபமே மிஞ்சுகிறது. அதே மாணவன் கிண்டலாய் “டேட்டிங் போகலாமா?“ என ஆசிரியரை அழைக்கும்போது, அவன் சட்டையைப் பிடித்து உழுக்கியபடி அழுதுகொண்டே “என்னால் உன்னை உணரமுடிகிறது Tae-hee.. நீ எப்படி என்னை மறந்தாய்? என கேட்பது வலியின் உச்சம்.
ஆரம்பத்தில் நாயகனுக்கு சாதாரணமாய் ஏற்படும் ஈர்ப்பு, போகப்போக மாணவனின் காதலி மீது வெறுப்பை ஏற்படுத்துவது யதார்த்தம். ஓரினச் சேர்க்கையாளனோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில், மருத்துவரிடம் தானே சென்று பரிசோதிப்பதும், மனைவியிடம் சந்தேகத்தை கேட்பதும் என ஆங்காங்கே இயக்குனர் தான் சொல்ல வந்ததை வலுப்படுத்துகிறார். (அவ்வளவு நேசத்தையும் சோகத்தையும் வைத்திருக்கும் ஹீரோ, திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்வது லாஜிக் உறுத்தல் என்றாலும் படம் பார்க்கும்போது அது நம் ஞாபகத்துக்கே வராமல்போவதுதான் படத்தின் பலம்).
காதலியுடன் நெருக்கமாயிருக்கும் ஒரு காட்சியில் நாயகனுக்கு விக்கல் வரும், பயம் அல்லது எக்சைட் ஆகும் தருணத்தில் விக்கல் வருவதாய் கிண்டல் செய்வாள். பின்னொரு காட்சியில் மாணவனுடன் கால் கட்டி ஓடும் போட்டியில் அவன் தோள் தொடும்போது அதே போல விக்கல் வந்தவுடன் பயந்து தன் வாய்பொத்துவது டைரக்டர் டச்.
கடைசி பத்து நிமிடங்களில் மாணவன் நாயகனைத் தேடிவருவதும், பின் நியூயார்க் செல்லும்போது நாயகனின் தோள்சாய்ந்து உறங்குவதும் கைகோர்த்து நடப்பதும் என எந்தவொரு காட்சியையும் மிகைப்படுத்திடாது, கொஞ்சமும் இச்சை கலக்காது காட்சிப்படுத்தியிருப்பது பாராட்டுதலுக்குரியது.
இறுதிக்காட்சியில் பாலத்திலிருந்து இருவரும் குதித்து தற்கொலை செய்துகொள்ளும் மறுநொடி கேமரா மெதுவாய் படத்தின் ஆரம்ப காட்சியைச் சுற்றி பயணிக்கும்போது, இசையுடன் நாமும் அங்கேயே நின்றுவிடுகிறோம்.
It's not because I love you. It's because all I can do is love you... I'll love you forever

.

Comments

Unknown said…
படத்தை தீங்கள் விமர்சித்திருக்கும் முறை படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத்தூண்டுகிறது
. பிற மொழிப் படங்கள் பார்க்க ஆவல் கொண்டதில்லை .ஆங்கிலப் படங்கள் வித்தியாசமான கதைக் களங்களை கொண்டு அமைகின்றன என்பதை அறிய முடிகிறது . சிறப்பான விமர்சனம்

Popular posts from this blog

மரணவலி தரும் உன் மௌனம்..

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்