விட்டுச் சென்ற ஏதோ ஒன்று..

அழத் திராணியற்று
அலமாறிக்குள் திணிக்கப்பட்டுக் கிடக்கும்
அவ்வார்த்தைகள்
சொல்வதற்கு எதையோ
மிச்சம் வைத்திருக்கின்றன.

கொத்தித் திங்கும்
நினைவுப் பருந்திற்கு
ஓடி ஒளியும் ரண மாமிசங்கள்.

தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கும்
அழைப்பான்களை அறுத்தெறிந்து
மெளனத்தின் பேரிரைச்சலுக்குள்
புதைந்துகொண்டே..

சதா புகைந்துகொண்டே இருக்கிறது
தீர்ந்துவிட்ட சொற்களின் குளிர்ச்சி.

அடித்து அடித்தே தோலுரித்த சாட்டையாய்
தழும்புகளை அடையாளப்படுத்திப் போகின்றன
அப் பிரியங்கள்.

விட்டுச்சென்ற ஏதோ ஒன்று
விழுங்கிக் கொண்டிருக்கிறது
எல்லாவற்றையும்.
.

Comments

வணக்கம்
கவிதையின் வார்த்தைகள் பரியங்களாக மனசில் பதிந்தது... பகிர்வுக்கு வாழ்த்துக்கள் த.ம 1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிதை மனதை குடையுது ! மீண்டும் நீங்கள் வலையில் இருப்பது கண்டு மகிழ்ச்சி!தொடர்ந்து எழுங்க!

Popular posts from this blog

மரணவலி தரும் உன் மௌனம்..

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்