ம(னி)தம்??!!
நண்பர் ஒருவரின் வலைப்பூவில் சமூக அக்கறையுள்ள பதிவொன்றை எழுதியிருந்தார் (அப்படித்தான் நினைத்தேன்). ஸ்வாரஸ்யமாகவும் விழிப்புணர்வுத் தகவலாகவும் இருந்ததால் படிக்க ஆரம்பித்தேன். எல்லாமே நன்றாகத் தான் இருந்தது. ஆனால் கடைசியில் அவர் சொன்ன தகவல்.. மொத்தப் பதிவின் யதார்த்தத்தையும் கெடுத்துவிட்டது. அவர் தன்னுடைய மதம் பற்றிய பெருமையுடன் பதிவை முடித்திருந்தார். பதிவில் குறிப்பிட்டிருந்த தகவல்களுக்கும் அவருடைய முடிவுரைக்கும் யாதொரு தொடர்பும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அப்பதிவை படித்த போது நான் கொண்டிருந்த ஆர்வம், அதை படித்து முடித்தபின் அதிருப்தியையே கொண்டுவந்தது. அவருடைய பதிவில் “சத்யமேவ ஜெயதே“ நிகழ்ச்சி பற்றி கூறியிருந்தார். அமீர்கான் பற்றி விமர்சனம் செய்திருந்தார். மருத்துவத் துறை மற்றும் பிற துறைகளை முன்வைத்து அலசும் அமீர், அந்நிகழ்ச்சியில் திரைப்படத் துறையைப் பற்றியும் விமர்சிக்கலாமே என்ற கேள்வியை முன்வைத்தார். தன்னுடைய துறை சார்ந்த அவலங்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து, அதிலுள்ள களைகளை அகற்ற முனையலாமே என்றும் எழுதியிருந்தார். மேலும் தவறுகளை சுட்டிக்காட்டும் நிகழ்ச்சிக்குழுவினர், ...