“Highway” – என் பார்வையில்..

Stockhome syndrome என்பதனை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம். தமிழில் அமர்க்களம் முதலிய சில படங்களில் பார்த்துப் பழகிய “தம்மைக் கடத்தியவர்கள் மீதே தோன்றும் ஈடுபாடு“ என்கிற விஷயம் தான்.
சாமான்ய வாழ்க்கைக்கு ஏங்கும் பணக்காரவீட்டுப் பெண்ணாய் Alia Bhatt. எதிர்பாராதவிதமாய் கடத்தப்பட்டு, அழுது, தப்பிக்க முயற்சி செய்து, பின் கொஞ்சம் கொஞ்சமாய் சூழ்நிலையை ரசிக்க ஆரம்பித்து, கடத்தியவரையே பிடித்துப்போய், “எதுவுமே வேணாம். நீ போதும்“ எனும் கதாப்பாத்திரம். அழுகை மட்டும் நல்லா வருது அம்மணிக்கு. கதாப்பாத்திரத்தின் அழுத்தத்தை இன்னும் தெளிவாக உணர்ந்து நடித்திருக்கலாம். தேர்ந்த முகபாவங்கள் மூலமாகவே ஸ்கோப் செய்யக்கூடிய காட்சிகளில் அதற்கான முக்கியத்துவத்தை அறியாது அலட்சியமாய் தவறவிட்டிருக்கிறார்.
Randheep Hooda சிரிச்சா நல்லாயிருக்கார். ஆனா சோதனைக்குனே இந்தப் படத்துல ஒரே ஒரு காட்சில தான் சிரிக்கிறார்.. வசனமும் ஏகத்துக்கு கம்மி. அதிகமாய் அவர் பேசியது “வாய மூடு..“ “உள்ள போ..“ “பேசாம இரு..“ அவ்ளோ தான். கதாப்பாத்திரம் உணர்ந்து நடிச்சிருக்கார்ங்குறதால கொஞ்சம் ஆறுதல். தனக்கென உணவு தயார் செய்யும் ஆலியாவை ஒளிந்திருந்து பார்த்து உணர்ச்சிவசப்பட்டு கதறி அழும் காட்சியில் க்ளாப்ஸ் வாங்குகிறார். ஆனால் அதற்கு ஆறுதல் சொல்கிறேங்குற பேர்ல அழகான காட்சியை சொதப்பியிருக்கிறார் ஆலியா.
படத்துக்கு உயிர் கொடுக்குறது ஏ.ஆர்.ரஹ்மான் தான். முற்பாதியில் பெரும்பாலும் பின்னணியைத் தவிர்த்துவிட்டு, ரெண்டாவது பாதியை முழுக்க ஆக்கிரமித்திருக்கிறார் மனுஷர். பஸ் ஸடாண்டில் தன்னுடனேயே வாழ விரும்பி பதட்டமாய் நிற்கும் ஆலியாவை, தூரத்தில் பார்த்து ரந்தீப் புன்னகைக்கும் காட்சியை இசையின் மூலம் கவிதையாக்கியிருக்கிறார்.
பயணம் பற்றிய திரைப்படங்களில் கதாப்பாத்திரங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும், அதற்கு நேர்மாறாய் லொகேஷன்கள் அதிகமாய் இருத்தல் அவசியம். இதில், தண்ணீர் பாயும் சில இடங்கள் தவிர, மனதில் நிற்கும் அளவிற்கு இடங்களைத் தேர்வு செய்யாமல் விட்டது குறை. குறிப்பாக, ஆலியா துப்பாக்கியை எடுத்து அழகு பார்க்கும் பனி பொழியும் காட்சியில் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம்.
மணிரத்னம் படத்தில் வரும் தீவிரவாதிகள் போலவே  இதிலும் (பணயக்கைதிகள் எவ்வளோ வாய் பேசினாலும்) இரக்கத்துடன் நடந்து கொள்கிறார்கள். ஆனால் நிஜத்தில் எந்த அளவுக்கு சாத்தியம் என்பது நமக்கே தெரியும். தமிழ் சினிமாபோல பணக்கார தந்தைக்கு சவால்விட்டு ஹீரோயினை தோளில் தூக்கிநடக்கும் ஹீரோயிச க்ளைமேக்ஸ் இதில் இல்லை என்பது மிகப்பெரிய ஆறுதல்.
படத்தின் பெரிய பலமே, கடைசிவரை பார்த்து முடிந்தபிறகு தான் அதன் குறைகள் ஒவ்வொன்றாய் நினைவுக்கு வர ஆரம்பிக்கிறது.
.

Comments

vimalanperali said…
நல்ல விமர்சனம் வாழ்த்துக்கள்.

Popular posts from this blog

மரணவலி தரும் உன் மௌனம்..

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்