மன்னிப்பு – கேட்போம் கொடுப்போம்..


மன்னிப்பு – இந்த வார்த்தை, சொல்வதற்கு வேண்டுமானால் எளிதாக இருக்கலாம். ஆனால் அதைக் கேட்பதும் கொடுப்பதும், அவ்வளவு சுலபமில்லை. பெரிய பெரிய பிரச்சனைகளையும் சச்சரவுகளையும் கூட ஒரே நொடியில் முடிவுக்குக் கொண்டுவரும் திறமை இந்த வார்த்தைக்கு உண்டு.
ஒருவர் இன்னொருவரை பாதிக்கின்ற விதத்தில் ஏதாவது தவறு செய்துவிட்டால், அத்தவறை உணர்ந்து, மனதார மன்னிப்புக் கேட்கும் செயல் உண்மையிலேயே பாராட்டத்தக்க ஒன்று. அதற்கும் அப்பாற்பட்டது, கேட்கப்படும் மன்னிப்பை ஏற்றுக்கொண்டு சகஜ நிலைக்குத் திரும்புவது.
“மன்னிப்பு கேட்பவன் மனுஷன், மன்னிக்கத் தெரிந்தவன் பெரிய மனுஷன்“ என்று ஒரு வசனம் உண்டு. இன்றைய சூழலில் அப்படிப்பட்ட மனிதர்களோ பெரிய மனிதர்களோ காணக்கிடைப்பது அரிது. ஈகோ, பிடிவாதம், வாக்குவாதம், புரிதலின்மை போன்ற பல விஷயங்களால் மன்னிப்பு என்பதே மறைந்து வருகிறது.
பலருக்கு, தான் செய்தது தவறென்று தெரிந்தும், அதை ஒப்புக்கொள்வதற்கு தன்மானம் இடம்பொடுப்பதில்லை. என்னதான் உயிர் நண்பனாக, உறவினராக, காதலன்/காதலியாக, கணவன்/மனைவியாக இருந்தாலும், வாக்குவாதங்களில் இருக்கும் ஆர்வம், தவறுகளை ஒத்துக்கொள்வதிலோ, ஏற்றுக்கொள்வதிலோ இருப்பதல்லை.
உதாரணமாக, வகுப்பில் ஒரு மாணவன் எதையாவது திருடிவிட்டு, அதை ஒத்துக்கொண்டு மன்னிப்பு கேட்கும்போது, இனி இப்படி செய்யக்கூடாதென்று அறிவுறுத்தி, அதை மன்னித்து விட்டுவிட வேண்டும். அதைவிடுத்து, அன்றிலிருந்து எந்தப் பொருள் காணவில்லையென்றாலும், அதை அவன்தான் எடுத்திருப்பானோ என்று சந்தேகக் கண்ணோடு பார்க்கக்கூடாது. இந்த நோக்கு, தவறு செய்யத் தூண்டுமே தவிர ஒருபோதும் திருத்தாது.
நம்மில் பலர் இந்தத் தவறினை செய்கிறோம். கேட்கப்படும் மன்னிப்பை தற்காலிகமாக வழங்கிவிட்டு, உள்ளூர அவர் செய்த தவறினை நினைத்துக்கொண்டே இருக்கிறோம். பல சந்தர்ப்பங்களில் அதை சொல்லிக்காட்டி குத்திக்கொண்டே இருப்பது இதுபோன்றவர்களின் வழக்கம். இது வெளியாட்களுக்கிடையே நடக்கும்போது ஏற்படும் பாதிப்பை விட, நேசிப்பவர்களுக்கிடையே நடக்கும் சந்தர்ப்பங்களில், அதிகம் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இன்னும் வெளிப்படையாக சொல்வோமேயானால், கணவன் மனைவிக்கிடையே அல்லது காதலர்களுக்கிடையே ஏதாவது மறைக்கப்பட்ட உண்மைகள் தெரிய வரும்போதோ அல்லது தெரியப்படுத்தப்படும்போதோ, அதை ஏற்றுக்கொண்டு மறக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். “மன்னித்துவிட்டேன்“ என்று வாயளவில் சொல்லிவிட்டு, அடுத்து ஏதாவதொரு சிறு வாக்குவாதங்களில் கூட அதை சொல்லிக்காட்டுவது கீழ்த்தரமானது.
பல குடும்பத்தில் இந்தப் பிரச்சனையை நாம் பார்த்திருக்கலாம். கணவன் அல்லது மனைவியின் பழைய காதல் பற்றிய உண்மைகள் தெரிந்தபோது, பெருந்தன்மையாக ஒருவருக்கொருவர் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் குடும்பத்தில் சிறு வாக்குவாதம் என்றாலும் “நீ இப்படி செஞ்சவ தானே.. இதையும் பண்ணிருப்ப.. யாருக்கு தெரியும்“ என்று அசால்ட்டாக பேசுவார்கள். இந்த குணமே, நாளாக நாளாக உறவுகளின் விரிசலுக்கு காரணமாகிவிடுகிறது.
ஒருவர், தான் சொன்ன பொய்யை ஒப்புக்கொள்ளும்போது, அடுத்து அவர் எதைப் பேசினாலும் அது பொய்யாகவே இருக்கக்கூடுமோ என்று நினைக்கும் சந்தேக புத்தி தவறானது. பொய் சொல்லித் தப்பிக்கும் பலரை விட, உண்மையை ஒப்புக்கொண்டு அவதிப்படுபவர்களே அதிகம்.
இங்கு நான் வைக்கும் வாதம், உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டாம் என்பதல்ல. ஒப்புக்கொண்டதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே. ஒரு முறை மன்னித்த தவறை, அடுத்து மறந்துவிட வேண்டும் என்பதே.. ஒவ்வொருமுறையும் நினைவுபடுத்தி, தன்னையும் வருத்தி, சம்மந்தப்பட்டவரையும் வருத்த வேண்டாம் என்பது தான்.
எனவே..
மன்னிப்பு – கேட்போம்... மனதாரக் கொடுப்போம்..
நன்றி..
.
.

Comments

மன்னிக்கணும். என் பேத்தி துபாயிலிருந்து நேரிலேயே வந்துள்ளதால், அவளுடன் கொஞ்சி மகிழவே நேரம் பற்றவில்லை. அதனால் யாருடைய வலைப்பூவுக்கும் அடிக்கடி வரமுடியாத நிலையில் நான்.

பேத்தி ஊருக்குப்போனதும் அவளைப்போன்ற தோற்றமுள்ள உங்கள் பதிவின் முகப்பில் உள்ள படத்தையாவது பார்க்கக் கட்டாயம் வருவேன்.

vgk
mannissukungka மன்னிச்சுக்குங்க மாஃப் கரோ
அன்பின் இந்திரா

மன்னிப்பு - கேட்பதும் கொடுப்பதும் அரிய செயல்கள் தான் - ஆனாலும் தயங்காமல் கேட்கவும் கொடுக்கவும் வேண்டும். அரிய கருத்து.

நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
தளத்தில் முதல் வருகை..

//பலருக்கு, தான் செய்தது தவறென்று தெரிந்தும், அதை ஒப்புக்கொள்வதற்கு தன்மானம் இடம்பொடுப்பதில்லை. என்னதான் உயிர் நண்பனாக, உறவினராக, காதலன்/காதலியாக, கணவன்/மனைவியாக இருந்தாலும், வாக்குவாதங்களில் இருக்கும் ஆர்வம், தவறுகளை ஒத்துக்கொள்வதிலோ, ஏற்றுக்கொள்வதிலோ இருப்பதல்லை.//

நிதர்சன உண்மை..

நாமும் மாமனிதர்களாக முயற்சிப்போம்..

பகிர்விற்க்கு நன்றி..
classic k7 said…
வாழ்வில் பலரை கடைசிவரை மன்னிக்கவே முடியாமல் போகிறது ஏனோ.
//ஒருவர், தான் சொன்ன பொய்யை ஒப்புக்கொள்ளும்போது, அடுத்து அவர் எதைப் பேசினாலும் அது பொய்யாகவே இருக்கக்கூடுமோ என்று நினைக்கும் சந்தேக புத்தி தவறானது. பொய் சொல்லித் தப்பிக்கும் பலரை விட, உண்மையை ஒப்புக்கொண்டு அவதிப்படுபவர்களே அதிகம்.//

உண்மைதான் இந்த அனுபவம் எனக்கும் வாழ்க்கையில் ஏற்பட்டதுண்டு.

சில வேளைகளில் பட்ட அவதிக்கு பொய்யே சொல்லிருக்கலாமோ என்று எண்ணியதும் உண்டு
மன்னிப்பு கேட்பவன் மனுஷன், மன்னிக்கத் தெரிந்தவன் பெரிய மனுஷன்//

ஆயிரம் கதை சொல்லும் வார்த்தை இது....!!!

----அசத்தல் பதிவு------
காயங்களை மறந்துவிட்டாலும்,அது ஏற்படுத்தும் தழும்பு,எளிதில் மறைவதில்லை! அந்த மாதிரியான நிலையே,மன்னிக்க விடாமல் மாந்தர்களை இம்சிக்கிறது!நல்லபதிவு!
வணக்கம் அக்கா,
நல்லா இருக்கீங்களா?

தவறுகளை உணர்ந்து எம்மை நாமே திருத்திக் கொள்ளும் நோக்கில் மன்னிப்புக் கேட்பது தொடர்பாக அருமையாகச் சொல்லியிருக்கிறீங்க.
"மன்னிப்புக் கேட்போம் கொடுப்போம்" நல்ல பகிர்வு.
தாங்கள் குறிப்பாக சில உறவுகளையும், தவறை மட்டுமே முன் வைத்து இப்பதிவிட்டிருப்பதால் தங்களின் கருத்து எனக்கும் ஏற்ப்புடையதே...

ஒட்டுமொத்தமாக எல்லோரையும் மன்னிக்கனும் என்றால் அது யாராளும் முடியாத ஒன்று. ஞானிகளால் மட்டுமே சாத்தியமான ஒன்று. காரணம் அவர்கள் யார்மேலேயும்/எதுமேலேயும் பற்று வைப்பது இல்லை. ஆனால் மனிதன் அப்படி அல்ல. ஏன் சொல்கிறேன் என்றால்...

தவறு செய்தவனை தயங்காமல் மன்னிக்கலாம்... சகோ...
துரோகம் செய்தவனை எக்காரணத்திற்க்கும் மன்னிக்கக் கூடாது என்பதே என் வாதம்...

தவறு/துரோகம் - வேறுபாடு தாங்களுக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்...

ஞானிகளை துரோகம் ஒன்றும் செய்யாது, மனிதனை தூங்கவிடாது...
தண்டிப்பது கோவத்தின் ஆரம்பம்...
மன்னிப்பு கோவத்தின் உச்சம்...

எதிரியை மன்னிக்கும்போது நாம் மனிதராகிவிடுகிவோம்...
மன்னிப்பு கேட்பது "மனிதம்"...!
மன்னிப்பை அங்கீகரித்து
மறப்பது "தெய்வீகம்"....!

நீங்க என்னடான்னா...///மன்னிப்பு – கேட்போம்... மனதாரக் கொடுப்போம்//// அப்படீன்னு சொல்றீங்க...!

ஆமா...! ஆமான்னு தலையாட்டிட்டு போனாலும்

நானும் மனுசந்தானுங்கோ....!

நல்ல பதிவு...!
SURYAJEEVA said…
மன்னிப்பதை விட மறப்பது என் பாலிசி என்பார் என் தந்தை...
அருமையான பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி.
குழந்தைப் பருவத்தில் இருந்து கற்றுக்கொடுக்கவேண்டிய
விஷயம். எந்த சூழ்நிலையிலும் வாழக்கூடிய தத்துவம் இது...
அருமையான பதிவுக்கு நன்றிகள் பல...
மன்னிப்பு என்பது சும்மா ஒப்புக்குக் கேட்காமல், தவறு செய்ததை உணர்ந்து மனதாரக் கேட்பதாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் சொல்லியிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் உண்மை என ஒப்புக் கொள்கிறேன். ஏங்க... நான் சரியாத்தான் பேசிட்டிருக்கனா..?
அருமையான பதிவு. நல்வாழ்த்துக்கள். நன்றி.

இதையும் படிக்கலாமே:"மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன?"
ஹேமா said…
இந்திரா...மன்னிப்புக் கேட்பதும் கொடுப்பதும் பெரிய விஷயமேயில்லை.தவறைச் சரியாகப் புரிந்துகொண்டால் குழந்தையாயிருந்தாலும் மன்னிப்புக் கேப்ட்பதில் ஒன்றும் குறையில்லை.வெள்ளைக்காரர்களிடம் நிறையவே பார்க்கலாம் இதை !
கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்..

Popular posts from this blog

மரணவலி தரும் உன் மௌனம்..

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்